ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்சிலின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாக சிறீலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
இவரது கருத்து பனிப்போர் நிலையில் இருந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் – சிறீலங்காவின் முறுகல் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்மின் ஜெனிவாவுக்கான விசேட நிருபர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 22 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப உரையை ஆற்றிய நவநீதம் பிள்ளை அவர்கள் சிறீலங்கா மிகமோசமான முறையில் மனதி உரிமை மீறல்களை புரிந்துள்ளதென உறுதிபட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சனல் 4 தயாரிப்பளர் கலம் மக்ரேயால் தயாரிக்கப்பட்ட முழுநீள ஆவணப்படம் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் வெளியிடப்படுவதை தடுக்கும் முயற்சியில் சிறீலங்கா தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த ஆவணப்படத்தில் செல்வன் பாலச்சந்திரன் படுகொலை உட்பட சிறீலங்கா இராணுவத்தால் மீறப்பட்ட பலமனித உரிமை விடயங்கள் ஆதரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








