மாற்றமடையும் ஜெனிவா களம்! குழப்பத்தில் சிறிலங்கா! தப்பிக்குமா?

February 8, 2013 Comments Off
மாற்றமடையும் ஜெனிவா களம்! குழப்பத்தில் சிறிலங்கா! தப்பிக்குமா?

ஜெனிவாவில் அடுத்த மாத ஆரம்பத்தில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு, சிறிலங்காவின் சார்பில் யாரை அனுப்புவது என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

வழக்கம்போல, ஜெனிவா கூட்டத்தொடருக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்கவே தலைமை தாங்குவார் என்று கடந்தவாரம், கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தார்.

எனினும், இம்முறை, அமைச்சர்கள் தவிர்க்கப்பட்டு, இராஜதந்திரிகளை கொண்ட குழுவோ சிறிலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை வாராந்த முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது கெஹலிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனிவா கள நிலைமைகளை அவதானித்தே, எத்தகைய இராஜதந்திரக் குழுவை அனுப்புவது என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்யும்.

ஜெனிவாவுக்கு அரசியல் பிரதிநிதிகளை அனுப்புவதில்லை என்றோ, அதிகாரிகளைக் கொண்ட குழுவை அனுப்புவது என்றோ சிறிலங்கா அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

ஜெனிவாவில் நிலைமைகளை கையாள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யும்படி அங்குள்ள சிறிலங்கா தூதவர் ரவிநாத் ஆரியசிங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

அங்குள் பின்புலச் சூழலை அவதானித்து, கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்குரிய தயார்படுத்தல்களை அரசாங்கம் மேற்கொள்ளும் என அமைச்சர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.