“கொலைகாரனே திரும்பிப் போ” பீகார் வந்த மகிந்தவை திரும்பிப் பார்க்க வைத்த அதிசயக் குரல்!

February 8, 2013 Comments Off
“கொலைகாரனே திரும்பிப் போ” பீகார்  வந்த மகிந்தவை  திரும்பிப் பார்க்க வைத்த அதிசயக் குரல்!

சிராந்தி ராஜபக்ச உள்ளிட்ட 70 பேருடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவை இன்று நண்பகல் வந்தடைந்தார்.

கயா அனைத்துலக விமான நிலையத்தில் அவரை, பீகார் முதல்வர் நித்தீஸ்குமார், மாநில கல்வி அமைச்சர் பி.கே சாஹி, மூத்த அரசாங்க மற்றும் காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

அங்கு மாநில காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து சிறிலங்கா அதிபர், அவரது குழுவினருடன் மகாபோதி ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு வழிபாடுகளை முடித்த பின்னர், சிறிலங்கா அதிபருக்கும் அவரது குழுவினருக்கும் மதிய விருந்தளிக்க மாநில முதல்வர் நித்தீஸ்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

அதேவேளை, மகாபோதி ஆலயத்துக்கு செல்லும் பாதைக்கு சற்று தொலைவில் இந்தியக் கம்யூனிஸ்ட் மாக்சிஸ்ட் லெனினிச பிரிவைச் சேர்ந்தவர்கள் சிறிலங்கா அதிபருக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.

ராஜபக்சவை வரவேற்க கூடியிருந்த கூட்டத்தில் கலந்திருந்தவர்கள் “தமிழர்களைக் கொன்ற கொலைகாரனே திரும்பிப் போ” என்று குரல் எழுப்பினர்.

கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் விரைந்து சென்று கண்டனக்குரல் எழுப்பியவர்கள் என்று சந்தேகத்தில் இரண்டு பேரைக் கைது செய்துள்ளதாக, பிரதி காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஸ்குமார் டுபே தெரிவித்துள்ளார்.

புத்தகாய முழுவதிலும் சிறிலங்கா அதிபருக்காக கடும் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.