நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலர் பொன்காந்தன் கட்டுநாயக்கவில் கைது

January 21, 2013 Comments Off
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலர் பொன்காந்தன் கட்டுநாயக்கவில் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் தனிப்பட்ட செயலரான பொன்காந்தன் எனப்படும் பொன்னம்பலம் லக்ஸ்மிகாந்தன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா செல்ல முயன்றபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலகத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, விசாரிக்கவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் தீவிரவாத தடுப்புப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலகத்தில் தேடுதல் நடத்தப்பட்டபோது, பொன்காந்தன் அங்கிருந்த போதும், அப்போது அவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்யவில்லை.

அந்த செயலகத்துக்குப் பொறுப்பாக இருந்த அருணாசலம் வேழமாலிகிதனை மட்டும் கைது செய்திருந்தனர்.

பின்னர் பொன்காந்தனைக் கைது செய்வதற்காக சிறிலங்கா காவல்துறையினர் தேடிய போது, அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இதையடுத்தே, அவர் நாட்டை விட்டுத் தப்பிஓட முனையலாம் என்பதால், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளை சிறிலங்கா காவல்துறையினர் விழிப்புநிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.