அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சனி என்ற இலங்கை தமிழ்ப் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
விலாவூட் தடுப்பு முகாமில் அவர் கடந்த பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இலங்கையில் இருந்தபோது போரில் விடுதலைப் புலிகளின் வாகன சாரதியாக இருந்த தமது கணவனை பறிகொடுத்த அவர் இரண்டு பிள்ளைகளுடன் 2010 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு அரசியல் அடைக்கலமும் பெற்றார்.
இந்தநிலையில் அவர் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து கணேஸ் என்பவரை மறுமணம் செய்து சிறிது காலத்தில் அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றுக்கூறி, ரஞ்சனி என்ற இந்தப்பெண், தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு அவர் குழந்தை ஒன்றை தடுப்பு முகாமில் பிரசவித்துள்ளார்.
எனினும் ரஞ்சனியையும் அவர் பெற்றெடுத்த குழந்தையையும் பார்வையிட அவரது கணவர் கணேஸுக்கு பார்வையாளர் அனுமதி நேரத்தை காட்டிலும் வேறு நேரங்களில் அனுமதி வழங்கப்படாது என்று தெரியவருகிறது.
அத்துடன் மனைவியுடனும் குழந்தையுடனும் இரவுப் பொழுதை கழிக்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சனியின் புதிய குழந்தைக்கு பார்த்தீபன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய பிரஜையான பார்த்தீபனை தாயிடம் இருந்து வீட்டுக்கு எடுத்துச்செல்லப் போவதில்லை என்று ரஞ்சனியின் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.
அதேநேரம் மனித உரிமை அமைப்புக்கள் ரஞ்சனியின் தடுத்து வைப்பு மனிதாபிமானமற்ற செயல் என்று குற்றம் சுமத்தியுள்ளன.








