தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களுக்கு எதிராக இலங்கைப் புலனாய்வாளர்களுடன் ஈபிடிபி கட்சியினரும் சேர்ந்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தை மூடிவிடுமாறு கோரி இலங்கைப் புலனாய்வாளர்களுடன் ஈபிடிபி கட்சியினரும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
கிளிநொச்சி நகரில் உள்ள காக்காகடை சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
அரசியலில் சிறிதரனின் வளர்ச்சியைக் கண்டு மக்களிடையே அவரின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் இலங்கைப் புலனாய்வாளர்களுடன் ஈபிடிபினரும் இணைந்து கிளிநொச்சியில் அமைந்துள்ள சிறிதரனின் அலுவலகத்தை சோதனையிட்டு வெடிமருந்து இருந்ததாக கூறி அமைப்பாளர் வேழமாலிகிதனையும் ஆதரவாளரையும் கைது செய்த சதி நடவடிக்கை அண்மையில் நடைபெற்ற இந்நிலையில் இன்று சிறிதரனுக்கும் பொன்காந்தனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடாத்தியுள்ளனர்.
மிக குறைந்தளவிலானோர் கலந்துகொண்ட அவ் ஆர்ப்பாட்டத்தில் நடந்த வேடிக்கை என்னவெனில், கடைக்கு சென்ற பெண்கள் அறுவரை வலுக்கட்டாயமாக தம் ஆர்ப்பாட்டத்தில் இணைத்துக்கொண்டமை தான் வேடிக்கை.
அப் பெண்களுள் ஒருவர் தம்மை அவர்கள் எவ்வாறு வலுக்கட்டாயமாக அவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வைத்தனர் என்பதை எமக்கு அறிவித்துள்ளபோதிலும், அவரின் பாதுகாப்பு நிமிர்த்தம் இங்கு அவ் ஒலியை வெளியிடவில்லை. (தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள எவ்வாறெல்லாம் கதைத்து வலுக்கட்டாயமாக அப்பெண்களை அழைத்தனர் என்றதை வெளியிடுவோம்)
மேலும், இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தனக்கென ஒரு இடத்தினை கொண்டு நற்பெயர் எடுத்து வீரம் நிறைந்த உண்மைப் பேச்சுக்களாலும் நேர்மையோடு அரசியலில் வளர்ச்சியடைந்து வரும் சி.சிறிதரன் அவர்களை ஏதாவது ஒரு வகையில் அரசியலில் இருந்து ஓரங்கட்டவும், அவரை கைதுசெய்யும் நோக்குடனும் இலங்கை அரசு மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.
அதற்கான காரணம் என்னவென ஆராய்ந்து பார்க்கையில்,
கிழக்கில் அரசுக்கு சார்பான ஒருவர் முதலமைச்சர் ஆனது போன்று வடக்கிலும் அரசுக்கு சார்பான ஒருவரை முதலமைச்சர் ஆக்குவதே அரசின் குறி.
இந்நிலையில் வடக்கில் நடைபெறவிருக்கும் மாநகரசபை தேர்தலில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குகளைப் பெற்ற சிறிதரனுக்கு ஆதரவான மக்கள், அரசு சார்பற்ற வேறொருவரை முதலமைச்சர் ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் சிறிதரன் மீது பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதாவது மாநகரசபைத் தேர்தலில் தெரிவாகப் போகும் முதலமைச்சரை கிளிநொச்சி மாவட்டத்தில் வைத்து தேசிய கூட்டமைப்பினரே முடிவு செய்யலாம். அந்தவைகையில் கூட்டமைப்பினருக்குள் சி.சிறிதரன் அவர்களுக்கே அவ் வல்லமை இருப்பதனாலேயே சிறிதரன் அவர்கள் மீது இலங்கைப் புலனாய்வார்களும் ஈபிடிபியினரும் சேர்ந்து பலவாறான சதி நடவடிக்கைகளை ஆரம்பித்து வருகின்றனர்.
எனினும் விழிப்பாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களோ, புலம்பெயர் மக்களோ யாவற்றையும் நன்கு அறிவர்.












