தலைமை நீதியரசரைப் பதவியில் இருந்து நீக்கினார் சிறிலங்கா அதிபர்

January 13, 2013 Comments Off
தலைமை நீதியரசரைப் பதவியில் இருந்து நீக்கினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் தலைமை நீதியரசர் பதவியில் இருந்து சிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 11ம் நாள் நிறைவேற்றப்பட்ட குற்றப்பிரேரணைக்கு அமைவாக, தலைமை நீதியரசரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவில் இன்று காலை சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்டார்.

அரசியலமைப்பின் 107 (2வது) பிரிவின் கீழ் சிறிலங்கா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக் கடிதம் உடனடியாகவே சிராணி பண்டாரநாயக்கவின் இல்லத்தில், அதிபர் செயலக மூத்த உதவிச்செயலர் மற்றும் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஆகியோரால் ஒப்படைக்கப்பட்டதாக சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பதவிநீக்கம் தொடர்பான சிறிலங்கா அதிபரின் உத்தரவு சிராணி பண்டாரநாயக்கவுக்கு, கிடைத்துள்ளதை உறுதி செய்துள்ள அவரது சட்டவாளர்கள், அடுத்த நடவடிக்கை பற்றி கருத்து வெளியிட மறுத்து விட்டனர்.