இரட்டை பிரஜாவுரிமை பெறுவோர் மீது விசாரணை நடத்த வேண்டும்! கோத்தா

December 30, 2012 Comments Off
இரட்டை பிரஜாவுரிமை பெறுவோர் மீது விசாரணை நடத்த வேண்டும்! கோத்தா

புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் போது, இதற்காக விண்ணப்பிக்கும் சம்பந்தப்பட்ட நபர்களைக் குழுவொன்றின் முன்னிலையில் அழைத்து முழுமையான விசாரணைகளை நடத்த வேண்டுமென இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த நபரின் பின்னணி தொடர்பில் விரிவான விசாரணையும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

1980ம் ஆண்டிற்குப் பின்னரான காலப் பகுதியில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரிச் சென்றவர்கள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.

இவ்வாறு சென்றவர்களில் பெரும்பாலானோர் கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் பிரஜா உரிமை பெற்றவர்களாக உள்ளனர்.

இதேவேளை, 2009 யுத்த முடிவுக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இவ்வாறானவர்கள் இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கும் போது இவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இதற்காகக் குடியுரிமைச் சட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்றும் கோதா தெரிவித்துள்ளார்.

2ம் இணைப்பு

ஈழ ஆதரவு தமிழர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட மாட்டாது

ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் தமிழர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது பாரியளவில் தாக்கம் செலுத்தும் நோக்கில் ஈழ ஆதரவுத் தமிழர்கள் இரட்டைப் பிராஜவுரிமை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் தமிழர்களின் இரட்டை பிரஜாவுரிமையை ரத்து செய்யுமாறு அரசாங்கம், குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலம் தமிழர்கள் பத்து லட்சம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ளுமாறு புலி ஆதரவு அமைப்புக்கள் ஆலோசனை வழங்கியுள்ளன.

இந்த சூழ்ச்சித் திட்டத்தை அறிந்து கொண்ட அரசாங்கம், இவ்வாறான புலம்பெயர் தமிழர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதில்லை என தீர்மானித்துள்ளது.

பெரும்பான்மை கட்சியொன்று ஆட்சி அமைப்பதனைத் தடுக்கும் நோக்கில், இவ்வாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்க்பபட்டுள்ளது.

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றும் நோக்கில் புலி ஆதரவு அமைப்புக்கள் செயற்பட்டு வருவதாக திவயின குற்றம் சுமத்தியுள்ளது.