எனக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 15 பொலிஸாரின் பாதுகாப்பு திருப்தி தரவில்லை. எனக்கு புலிகளின் அச்சுறுத்தல் உள்ளது. தனிப்பட்ட நபர் ஒருவரால் அல்லது இருவரால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவர்களால் பாதுகாப்பு வழங்கமுடியும்.
ஆனால் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து என்னைக் காப்பாற்ற 15 பொலிஸாரினால் முடியாது. என்று திகில் கிளப்பியுள்ளார் பொன்சேகா.
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அப்பேட்டியில் அவர் முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபின்னர், 200 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு கட்டளை வழங்கியிருந்தேன்.
இது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவானது. அது நியாயமானதே.
நான் போரைத் தொடங்கியபோது, இலங்கை இராணுவத்தில் 80 டாங்கிகள் இருந்தன.
போர் முடிவுக்கு வந்தபோது 30 டாங்கிகளே எஞ்சியிருந்தன. போரின் போது டாங்கிகளை பழுதுபார்ப்பதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை. இதனால், போரின் இறுதி நாட்களில், பெரும்பாலும் டாங்கிகள் இன்றியே நான் சண்டை செய்ய வேண்டியிருந்தது. போர் முடிந்த பின்னரும் நாம் இந்த துருப்புக்களை பாதுகாக்க வேண்டியிருந்தது.
அந்தநிலையில் சேதமடைந்து பழுதுபார்க்காத டாங்கிகளை கழித்து விடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதற்காகவே, 200 மில்லியன் டொலருக்கு கவச வாகனங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டேன்.
அது ஒரு இராணுவத் தளபதி என்ற முறையில் எனது கடமை.








